திங்கள், 25 ஜூன், 2018

தகராறு என்ற சொல்...

ஆடுகள் இரண்டு எதிரெதிரே வரும்போது விலகி வழிகொடுக்காது;

இரு ஆடுகளுமே வழிவிடாத நிலையில் மோதல் ஏற்படும்;

இரண்டுமே தலைகளால் முட்டிக் கொள்ளும்.

இதையே தமிழர்கள் தகராறு எனக் குறிப்பிட ஆரம்பித்தனர்.

தமிழில் ஆட்டை தகர் என்றனர்.

ஆறு என்றால் வழி.

தகராறு என்றால் தகரின் ஆறு.

ஆட்டின் வழி தகராறு

அதிலிருந்து பிறந்த சொல்தான் தகராறு.

செம்மறியாடுகள் வெள்ளாடுகளைவிட அறிவு குறைந்தவை.

மேயும் செம்மறியாடுகள் எதிரில் சிறு கால்வாய் வருமாயின் அவை அதைத் தாண்டாது நிற்கும்.

இதற்காகவே இடையர்கள் செம்மறியாடுகளிடையே இரு வெள்ளாடுகளை மந்தையில் சேர்த்திருப்பார்கள்.

வெள்ளாடுகள் கால்வாயைத் தாண்டிவிடும். அதைப் பார்த்துச் செம்மறியாடுகளும் தாண்டும்.

ஆடுகளை மேய்ப்பவர்கள் இயற்கை அறிவை அதிகமாகப் பெற்றிருப்பர். காடு கழனிகள், தோட்டந்துரவுகள் போன்றவற்றில் அறிவுகளைப் பெற்றிருப்பதைப்போல விண்வெளியைப் பற்றிய அறிவுகளையும் அதிகம் பெற்றிருப்பர்.

மாக்களை மேய்க்கும் திறமை பெற்றவர்கள் மக்களை மேய்க்கும் திறமையில் வலுவானவர்களாக இருப்பார்கள் என்பதாலோ, இறைத்தூதர்களில் பலர் நல்ல மேய்ப்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

இபுறாகீம் நபிகளாரிடமிருந்து ஈஸா நபி வரை பலரும் ஆடு மேய்த்தலைத் தொழிலாகக் கொண்டவர்களே!

அவர்களைப் போலவே சிறுவயதில் முஹம்மது நபியவர்களும் ஆடு மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார்.


நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு
என்ற புத்தகத்தில் ..

- தாழைமதியவன்

திங்கள், 18 ஜூன், 2018

நபிகள் நாயகம்

இஸ்லாத்தைப் பலரும் மதமாகவே எண்ணுகின்றனர்.

அது அகம்,புறம் இரண்டையும் வழி நடத்திச் செல்லக்கூடிய மார்க்கமென அறிந்தார் இல்லை.

அண்ணலாரையும் ஒரு மத நிறுவனராகவே கருதுகின்றனர்.

அவர் கடந்த கால சமுதாயத் தலைவர் என்பதையோ நிகழ்கால வாழ்வியலைச் செம்மையாக்கியவர் என்பதையோ வருங்கால மக்களுக்குரிய மகத்தான வழியை வகுத்துத் தந்தவர் என்பதையோ
புரிந்தார் இல்லை.

அண்ணலாரைப் பற்றியும் அவர்கள் மூலம் அளிக்கப்பட்ட திருக்குர்ஆன் கருத்துகள் பற்றியும் ஒவ்வொரு முஸ்லிமும் சுருக்கமாக மாற்றுமதச் சகோதரரிடம் சொல்லியிருந்தால் ‘இஸ்லாமியச் சித்திரம்’ அனைவரிடமும் தெளிவாக காணக்கிடைத்திருக்கும்.

அந்தப் பெருங்குறையை நீக்கினால்தான் ‘இஸ்லாம்’ எனில் சாந்தி என்பதும் அது கூறுவது ‘சரணாகதி தத்துவம்’ என்பதும் புரியும்.

ஆன்மிகத் தலைவர் முதல் அரசியல் தலைவர் வரையுள்ள பலரிடம் நாம் பின்பற்றக்கூடிய முன்மாதிரிகள் முழுமையாக இருக்காது.

ஆனால் அண்ணலாரின் அக புற வாழ்க்கையில் முன்மாதிரிகள் அனைத்தும் இருக்கக் காணலாம்.

அவை நாம் பின்பற்றக்கூடிய முன்மாதிரிகளாக இருப்பதால் அண்ணலாரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.

நபிகளாரின் வாழ்வை வாசித்தறிந்தால்
நம் வளமான வாழ்க்கைக்கு உரமாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.


திங்கள், 11 ஜூன், 2018

பெற்றோர்களுக்காக ..

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் .

சிறுவர்களை நல்ல பண்புகளுடனும் , பழக்கவழக்கத்துடனும் , பாசத்துடன் அன்பையும் காட்டி பெற்றோர்கள் வளர்க்க வேண்டியது அவசியம்.

இளம் வயதிலேயே சிறந்த அறிவுள்ள புத்திசாலியான பிள்ளையாக அவர்களை வளர்த்து இந்த உலகில் அவனும் ஒரு சிறந்த தலைமகனாக மிளிர வேண்டும் .

இளம் வயதில் கல்வி அறிவின்றி வளரும் சிறுவர்கள் பெரியவர்களானதும் இந்த உலகில் கவனிப்பார் யாரும் அற்று ஒரு அடிமைத்தனுத்துக்குள் சிக்கி கொள்கிறார்கள்.

பெற்றோர்கள் தமது கஷ்டங்களை பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

ஆடம்பரமான வாழ்க்கை வாழும் போது அவர்களுக்கு கஷ்ட, துன்பங்கள் தெரியாது வளருகிறார்கள்.

ஒரு சிறுவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அவனது பெற்றோர் மற்றும் அவனிருக்கும் சூழல் என்பன காரணிகள் ஆகின்றன.

எனவே சிறுவர்களிடம் பேசி கத்துவதை விட அன்பால் அவர்களை திருத்த முயலுங்கள்.

எதனையும் அன்பாக , ஆறுதலாக சொல்லி பாருங்கள் .

அன்பால் முடியாதது ஒன்றும் இல்லை . 


அஸ்ஸலாமு அலைக்கும்.